ராணிப்பேட்டை பெல் நிறுவனப் பொது மேலாளர் வீட்டில் 75 சவரன் தங்க நகை, ரொக்கப் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
ராணிப்பேட்டையை அடுத்த சிப்காட் தொழிற்பேட்டை அருகே பாரத மிகுமின் நிறுவனத்தின் பாய்லர் உற்பத்தி பிரிவு தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் பொது மேலாளராக (வணிகம்) அனில்குமார் பணியாற்றி வருகிறார். இவர், கடந்த சில தினங்களுக்கு முன் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் கேரள மாநிலம் குருவாயூருக்குச் சென்றுவிட்டு ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினர். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்துள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே வீட்டில் வைத்திருந்த 75 சவரன் தங்க நகை மற்றும் ரூ. 4 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. தகவலறிந்த மாவட்ட எஸ்.பி. பர்வேஷ் குமார், டி.எஸ்.பி. கலைச்செல்வம் ஆகியோர் அங்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. சிப்காட் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக 6 தனிப்படைகளை அமைத்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.