அரக்கோணம் நகராட்சிப் பகுதியில் தொடங்கப்பட்டுள்ள சாலைகள் சீரமைப்புப் பணி குறித்த காலத்தில் நிறைவடையும் என்று அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி தெரிவித்தார்.
அரக்கோணம் நகரில் புதைசாக்கடை அமைக்கும் பணிகள் தற்போது 95 சதவீதம் முடிவடைந்துள்ளன. தோண்டப்பட்ட சாலைகளைச் சீரமைக்கும் பணிகள் தொடக்க விழா வியாழக்கிழமை பழனிபேட்டை வி.பி.கோயில் தெருவில் நடைபெற்றது.
விழாவுக்கு, நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சண்முகம் தலைமை வகித்தார். அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி பணிகளைத் தொடங்கி வைத்து, செய்தியாளர்களிடம் கூறியது: முதல்கட்டமாக ரூ. 5 கோடி மதிப்பீட்டில் 36 சிமென்ட் சாலைகள் அமைக்கும் பணிகளும், 8 தார்ச் சாலைகள் அமைக்கும் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன. தற்போது தொடங்கப்பட்டுள்ள சாலைகள் சீரமைப்புப் பணிகள் குறித்த காலத்தில் நிறைவடையும் என்றார்.
விழாவில், அதிமுக நகரச் செயலர் கே.பி.பாண்டுரங்கன், அவைத் தலைவர் காமராஜ், நகர்மன்ற முன்னாள் உறுப்பினர்கள் செல்வம், சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.