அதிகாரியைக் கண்டித்து வட்டார வளர்ச்சி அலுவலகம் முற்றுகை

நூறு நாள் வேலை திட்ட பெண்களை தகாத வார்த்தைகளால் திட்டியதாக, துணைப் பொறியாளரைக் கண்டித்து

நூறு நாள் வேலை திட்ட பெண்களை தகாத வார்த்தைகளால் திட்டியதாக, துணைப் பொறியாளரைக் கண்டித்து பெண்கள் திருப்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனர்.
திருப்பத்தூரை அடுத்த ஜமுனாபுதூர் ஊராட்சியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இப்பகுதி மக்கள் 100 நாள் வேலை திட்டம் சார்பில், புதுபூங்குளம் என்ற பகுதியில் உள்ள ஏரி மற்றும் குட்டைகளை தூர்வாரும் பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தனர்.
அப்போது திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் துணைப் பொறியாளர் ஆய்வு செய்வதாகக் கூறி அங்கு சென்றுள்ளார். அங்கு பணியில் ஈடுபட்டிருந்த பெண்களை கணக்கெடுத்துள்ளார். அப்போது 8 பேரை வேறு இடத்தில் பணி செய்ய ஊராட்சி உதவியாளர் அனுப்பி இருந்தாராம். 
இதைப்பார்த்த துணைப் பொறியாளர் அந்த 8 பெண்களுக்கும் வருகைப் பதிவேட்டில் விடுப்பு போட்டதாகத் தெரிகிறது.
இதையறிந்த மற்ற பெண்கள், துணைப் பொறியாளரிடம், ஊராட்சி செயலர் டெங்கு ஒழிப்புப் பணிக்காக 8 பேரையும் அனுப்பி உள்ளதால், அங்கு பணி செய்து வருகின்றனர் எனத் தெரிவித்துள்ளனர். 
அப்போது பொறியாளர் பெண்களை தகாத வார்த்தைகளால் திட்டியதாகக் கூறப்படுகிறது. மேலும் அடுத்த நாளுக்கான பணி வழங்கப்பட மாட்டாது எனக் கூறி, அவர்களுக்கான பணி நியமன அட்டைகளையும் அலுவலகத்துக்கு கொண்டு சென்றதாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் மற்றும் 100 நாள் வேலைத் திட்ட பெண்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
தகவலறிந்து அங்கு வந்த ஊராட்சிகளின் உதவி இயக்குநர் பிரேம்குமார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் முருகேசன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.  அதிகாரி மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில், அனைவரும் கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com