சமூக வலைதளங்களில் ஜாதி மோதலை தூண்டும் விதமாக விடியோ வெளியிட்டுள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வேலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் பாமகவினர் புகார் தெரிவித்தனர்.
பாமகவின் மாநில துணைப் பொதுச் செயலர் இளவழகன் தலைமையில் அக்கட்சியினர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்
குமாரை சனிக்கிழமை சந்தித்து மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர்கள் கூறியது:
தமிழகம் முழுவதும் தற்போது சமூக வலைதளங்களில் விடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. இதில், ஊதா, மஞ்சள் நிறத்தில் சட்டையும், நீலநிற பேன்ட்டும் அணிந்த ஒரு நபர், அம்பேத்கர் உருவப்படத்தின் முன் நின்றபடி ஜாதிய வன்முறையை தூண்டும் விதமாகவும், பொதுமக்கள் கூடும் இடத்தில் உறுதிமொழி ஏற்றுக்கொள்வது போன்றும், அவரைப் பின்பற்றி பலரும் அதை வழிமொழிவது போன்றும் காட்சிகள் உள்ளன.
இதன்மூலம், அந்த நபர் தமிழகத்தில் திட்டமிட்டு ஜாதிய மோதலை தூண்டுவதுடன் மட்டுமின்றி காவல் துறை ஆதிக்க ஜாதிக்கு துணைபோவது போன்ற தோற்றத்தையும் ஏற்படுத்தும் விதத்தில் உள்ளது.
அந்த விடியோ காட்சிகளில் உள்ள நபரையும், அவருடன் உறுதிமொழி எடுக்கும் கும்பலையும் பிடித்து போலீஸார் விசாரணை நடத்த வேண்டும் என மனு அளித்துள்ளோம் என்றனர்.
ஆம்பூரில்...
இதேபோல், வேலூர் வடமேற்கு மாவட்ட பாமக சார்பில் அதன் நிர்வாகி எஸ். கோதண்டன் ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் சனிக்கிழமை புகார் அளித்தார்.