வேலூர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் 3 லட்சம் மரக் கன்றுகளை நடுவதற்கான திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதை ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.
ஈஷா பசுமை பள்ளி திட்டமும், தமிழக பள்ளி கல்வித் துறையும் இணைந்து 9 மாவட்டங்களில் 2,500 பள்ளிகளைச் சேர்ந்த ஒரு லட்சம் மாணவர்களுக்கு மரக்கன்று உற்பத்தி பயிற்சியை அளித்தன. வேலூர் மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ் சுமார் 150 பள்ளிகளைச் சேர்ந்த 8 ஆயிரம் மாணவர்களுக்கு மரம் வளர்ப்பு தொடர்பான பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
இதற்காக, ஒவ்வொரு பள்ளியிலும் தேசிய பசுமை படை மாணவர்களைக் கொண்டு ஒரு நர்ஸரி உருவாக்கப்பட்டு அவற்றின் மூலம் ஆண்டுக்கு தலா 2 ஆயிரம் வீதம் மாவட்டம் முழுவதும் சுமார் 3 லட்சம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வேலூர் மாவட்டப் பள்ளிகளில் மாணவர்களில் உற்பத்தி செய்த மரக்கன்றுகள் நடவு செய்வதற்கான தொடக்க விழா சத்துவாச்சாரியில் உள்ள தனியார் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன், மரக்கன்றுகளை நடவு செய்யும் பணியைத் தொடங்கி வைத்துப் பேசியது:
வழக்கமாக மரக்கன்று நடுவது என்றால், நர்ஸரிகளில் இருந்து வாங்கி வந்து மரக்கன்றுகளை மாணவர்களிடம் கொடுத்து நட வைப்பர். ஆனால், ஈஷா பசுமை பள்ளி இயக்கம் மாணவர்களே நேரடியாக மரக் கன்றுகளை உருவாக்கி நடுகின்றனர். இது ஒரு முன்மாதிரி திட்டமாகும். இந்தத் திட்டத்தில் ஒரு பள்ளியில் 2,000 மரக் கன்றுகள் உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், சில பள்ளிகள் இப்போதே 6,000 மரக்கன்றுகள் உருவாக்கியிருப்பது மாணவர்களிடம் உள்ள ஆர்வத்தை வெளிப்படுத்துகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் அடுத்த 3 ஆண்டுகளில் வேலூரில் லட்சக்கணக்கான மரங்களை மாணவர்கள் நட்டு வேலூரை பசுமையாக்க வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ், ஈஷா பசுமைத் திட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.