தமிழகத்திலேயே பிரசவ சேவையில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனை முதலிடம் வகிக்கிறது என மாநில வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார்.
திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் பிரிவு திறப்பு, ஒரு மாதத்தில் 500 பிரசவங்கள் பார்த்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்குப் பாராட்டு மற்றும் விபத்து அறுவை சிகிச்சை மையக் கட்டுமானப் பணி தொடங்க விழா திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை நடைபெற்றது.
டயாலிசிஸ் பிரிவைத் திறந்து வைத்து அமைச்சர் கே.சி.வீரமணி பேசியது:
திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் மட்டும் 510 பிரசவங்கள் நடந்துள்ளன. ஒரு மாதத்தில் 6 மருத்துவர்கள் 510 பிரசவங்களைப் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்திலேயே திருப்பத்தூர் அரசு மருத்துவமனை பிசரவ சேவையில் முதலிடத்தில் உள்ளது பெருமைக்குரியது. இந்த அரசு மருத்துவமனை மாவட்ட அந்தஸ்தில் குறிப்பிடத்தக்க மருத்துவமனையாக உள்ளது.
நாள்தோறும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புற நோயாளிகள் வருகின்றனர். தற்போது ரூ. 18 கோடி மதிப்பில் விபத்து அறுவை சிகிச்சை மற்றும் எலும்பு முறிவு அறுவை சிகிச்சை பிரிவுக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதேபோல், ரூ. 5 கோடி மதிப்பில் புதிய வார்டுகள் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. மேலும், இந்த மருத்துவமனையில் இடப்பற்றாக்குறை உள்ளதால் இதன் அருகேயுள்ள காவலர் கவாத்து மைதானத்தை அரசு மருத்துமனைக்குக் கொடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து முதல்வரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த மருத்துவமனையில் மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏ நல்லதம்பி சட்டப் பேரவையில் பேசியுள்ளார்.
இதுகுறித்து முதல்வரிடம் பேசி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
நிகழ்ச்சிக்கு, மருத்துவ இணை இயக்குநர் யாஸ்மின் தலைமை வகித்தார். மருத்துவ அலுவலர் செல்வகுமார் வரவேற்றார். எம்எல்ஏ நல்லதம்பி, முன்னாள் எம்எல்ஏ ரமேஷ், அதிமுக நகரச் செயலர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர். மருத்துவர் பிரபாகரன் நன்றி கூறினார்.