மாவட்டத்தில் 48 ஆயிரம் வாக்காளர்கள் பெயரை பட்டியலில் இருந்து நீக்க பரிசீலனை: சிறப்பு தேர்தல் பார்வையாளர் தகவல்
வேலூர் மாவட்டத்தில் வெளியூர்களுக்கு குடிபெயர்ந்தவர்கள், இறந்தவர்கள் என மொத்தம் 48 ஆயிரம் வாக்காளர்களின் பெயர்களை பட்டியலில் இருந்து நீக்குவதற்கான பரிசீலனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக வேலூர், திருவண்ணாமலை மாவட்ட சிறப்பு தேர்தல் பார்வையாளர் சந்தோஷ் கே மிஸ்ரா தெரிவித்தார்.
வேலூர், திருவண்ணாமலை மாவட்ட சிறப்பு தேர்தல் பார்வையாளர் சந்தோஷ் கே மிஸ்ரா வாலாஜாபேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட ஆட்சியர் எஸ்.ராமன் உடன் இருந்தார்.
ஆய்வுக்கு பின் சந்தோஷ் கே மிஸ்ரா செய்தியாளர்களிடம் கூறியது:
வேலூர் மாவட்டம் முழுவதும் வாக்காளர்கள் சரிபார்ப்பு பட்டியல் வைத்துக் கொண்டு, தேர்தல் அலுவலர்கள் நேரடியாக வீடு வீடாகச் சென்று சரிபார்த்து, சம்பந்தப்பட்ட வீடுகளில் நோட்டீஸ் வழங்கி விசாரணை நடத்தப்படும். தொடர்ந்து தீவிர விசாரணைக்குப் பின் படிவம் 7- ஐ பூர்த்தி செய்து மாவட்ட வருவாய் அலுவலர், வட்டாட்சியர் ஆகியோர் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்குவற்கான நடவடிக்கையை மேற்கொள்வர்.
அதேபோல், வேலூர் மாவட்டத்தில் இடம் விட்டு இடம் குடிபெயர்ந்தவர்கள், இறந்தவர்கள் என மொத்தம் 48 ஆயிரம் வாக்காளர்களின் பெயர்களை பட்டியலில் இருந்து நீக்குவதற்கான திட்டம் பரிசீலனையில் உள்ளது. இதில், வாலாஜாபேட்டை வட்டத்தில் மட்டும் ஆயிரம் வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் உள்ளது என்றார்.
ஆய்வைத் தொடர்ந்து வாலாஜாபேட்டை வட்டத்துக்குள்பட்ட கடப்பேரி ஊராட்சி பொதுமக்களிடம் வாக்காளர் பட்டியல் குறித்த குறைகளைக் கேட்டறிந்தார்.
ராணிப்பேட்டை வருவாய்க் கோட்டாட்சியர் (பொறுப்பு ) வேணுசேகரன், வட்டாட்சியர் பூமா மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நகராட்சி ஆணையர்கள், வருவாய்த் துறையினர் உடன் இருந்தனர்.