களைகட்டியது பொங்கல் பொருள்கள் விற்பனை

தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தேவையான பானைகள், பச்சரிசி, கரும்பு, வெல்லம் உள்ளிட்ட பொருள்களின் விற்பனை வேலூரில் சனிக்கிழமை களைகட்டியது. இதனால், கடை வீதிகளில் மக்கள்

தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தேவையான பானைகள், பச்சரிசி, கரும்பு, வெல்லம் உள்ளிட்ட பொருள்களின் விற்பனை வேலூரில் சனிக்கிழமை களைகட்டியது. இதனால், கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.
தமிழர் திருநாளான தைப்பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பொங்கல் பானை, கரும்பு, மஞ்சள் உள்ளிட்ட பூஜைப் பொருள்கள் அனைத்தும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லாரிகளில் கொண்டுவரப்பட்டு வேலூரில் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளன. மேலும், ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் இருந்து காய்கறிகளும் அதிகளவில் வரப்பெற்றுள்ளன. பூஜைப் பொருள்களையும், காய்கறிகளும் வாங்குவதற்கு வேலூர் கடை வீதிகளில் சனிக்கிழமை காலை முதலே மக்கள் கூட்டம் அலைமோதியது.
குறிப்பாக, கடைகள் நிறைந்த பழைய பேருந்து நிலையம், அண்ணா சாலை, மாநகராட்சி சாலை, ஆற்காடு சாலை, சத்துவாச்சாரி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் மக்கள் பெருமளவில் குவிந்து பொங்கலுக்குத் தேவையான பொருள்களை ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். எனினும், பொங்கல் பொருள்களின் விலை கடந்த ஆடைவிட சற்று அதிகரித்துக் காணப்பட்டது.
குறிப்பாக, கடந்த ஆண்டு
ரூ. 25 முதல் ரூ. 50-விற்கப்பட்ட ஒரு ஜோடி கரும்புகள் இந்த ஆண்டு ரூ. 60 முதல் ரூ. 90-க்கு விற்கப்பட்டன. மஞ்சள் கொத்து ஒன்று ரூ. 5-க்கு விற்கப்பட்டது. பொங்கல் பானைகள் சிறியது ரூ. 50 என்ற விலையிலும், பெரியது ரூ. 200 வரையிலும் விற்பனை செய்யப்பட்டன. அதேசமயம், காய்கறிகள் வரத்தும் அதிகமாக இருந்ததால் விலை சற்று வீழ்ச்சியடைந்திருந்தது.
இதனிடையே, பொங்கல் பண்டிகையையொட்டி மாவட்டத்தில் ஆங்காங்கே எருது விடும் விழாக்கள் நடத்தப்படுவது வழக்கம் என்பதால், இப்போட்டிகளுக்குத் தேவையான பொருள்களும் விற்பனைக்கு குவிந்திருந்தன.
போட்டிகளில் பங்கேற்கும் எருதுகளை அலங்கரிக்கத் தேவையான ஜல்லிக்கட்டு மணி, கோழி மணி, கால் சலங்கை, நெத்தி சலங்கை, கொண்டைக்கயிறு, கழுத்து குஞ்சான் கயிறு, தலைக்கயிறு, மூக்கணாங்கயிறு என பல கயிறுகள் விற்பனை செய்யப்பட்டன. இவை ஒரு ஜோடி ரூ. 50 முதல் ரூ. 700 வரை விற்கப்பட்டன. காளைகளை அலங்கரிக்கத் தேவையான கயிறுகள், மணிகள் என ஒட்டுமொத்தப் பொருள்களும் சேர்த்து ரூ. 1,500 என்ற அளவில் விற்பனை செய்யப்படுகின்றன. அவற்றை எருதுகள் வளர்ப்போர் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com