காட்பாடியில் நிதி நிறுவன உரிமையாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 6 பேர் காவல் நிலையத்தில் சனிக்கிழமை சரணடைந்தனர்.
வேலூர், காட்பாடி தாராபடவேடு காந்தி நகரைச் சேர்ந்தவர் ஸ்டாலின் (எ) செல்வராஜை (60) காய்கறி மார்க்கெட் பகுதில் கடந்த 10-ஆம் தேதி 4 பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொலை செய்தது.
இந்நிலையில், இக்கொலை வழக்கு தொடர்பாக தாராபடவேடு காந்தி தெருவைச் சேர்ந்த முருகன் (24), கஸ்தூரி நகரைச் சேர்ந்த தேவா (எ) தேவராஜ் (28) ஆகியோர் வேலூர் நீதித்துறை நடுவர் மன்றம் எண்.3-இல் வெள்ளிக்கிழமை சரணடைந்தனர். அவர்கள் 2 பேரும் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர்.
இந்த வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த மேலும் 4 பேரை காட்பாடி அருகே தனிப்படை போலீஸார் சனிக்கிழமை சுற்றிவளைக்க முயன்றனர். ஆனால், அவர்கள் தப்பியோடிவிட்டதாகத் தெரிகிறது.
இந்நிலையில், சேவூரைச் சேர்ந்த அசோக் என்கிற குருவி (29), பழைய காட்பாடி பகுதியைச் சேர்ந்த பாலா (30), காட்பாடியைச் சேர்ந்த ரஹீம் (29), முரளி (30) உள்ளிட்ட 6 பேர் காட்பாடி காவல் நிலையத்தில் சனிக்கிழமை சரணடைந்தனர். அவர்களிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.