குடியாத்தம் அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற தொழிலாளி ரயில் மோதியதில் இறந்தார்.
அணைக்கட்டு வட்டம், ராஜாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சிவாஜி (45).
தொழிலாளியான இவர், வெள்ளிக்கிழமை மாலை குடியாத்தம் அருகே ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற போது ரயில் மோதி நிகழ்விடத்திலேயே இறந்தார்.
தகவலறிந்த ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸார் அங்கு சென்று சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
லாரி மீது பைக் மோதியதில் இளைஞர் சாவு
வாலாஜாபேட்டை அருகே லாரி மீது பைக் மோதிய விபத்தில் இளைஞர் இறந்தார்.
வேலூர் அணைக்கட்டை அடுத்த ஊசூர் பகுதியைச் சேர்ந்தவர் சந்துரு (21). இவர், வெள்ளிக்கிழமை சென்னையில் இருந்து வேலூர் நோக்கி தனது பைக்கில் வந்து கொண்டிருந்தார்.
வாலாஜாபேட்டையை அடுத்த வன்னிவேடு தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது பைக் மோதியது.
இதில் பலத்த காயமடைந்த சந்துரு வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் சனிக்கிழமை இறந்தார்.
இதுகுறித்து வாலாஜாபேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.