ராணிப்பேட்டை பாலாற்றங்கரை மிஸ்ரி நகரில் அமைந்துள்ள மகா பிரத்யங்கிரா தேவி கோயிலில் ஆனி மாத அமாவாசையையொட்டி, மகா நிகும்பலா யாகம் வியாழக்கிழமை நள்ளிரவு நடைபெற்றது.
கோயில் அறங்காவலர் பி.எஸ்.மணி சுவாமிகள் தலைமையில் வியாழக்கிழமை இரவு 7 மணியளவில் மகா கணபதி ஹோமத்துடன், மகா யாகம் தொடங்கியது.
தொடர்ந்து, மகா சுதர்சன யாகம், மகா சண்டி யாகம், மகா வராஹி யாகம், பகளாமுகி யாகம் உள்ளிட்ட 21 வகையான யாகங்கள் நடைபெற்றன. பின்னர் நள்ளிரவு 12 மணியளவில் உலக நன்மை வேண்டி மகா நிகும்பலா யாகம் நடைபெற்றது.
இதையடுத்து மகா பிரத்யங்கிரா தேவிக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது.
இதில், ராணிப்பேட்டை சுற்றுவட்டாரம் மட்டுமின்றி ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.