இங்கிலாந்தில் நடைபெற உள்ள திருக்குறள் மாநாட்டிற்காக ஆம்பூரைச் சேர்ந்த ஆசிரியரின் திருக்குறள் குறித்த கட்டுரை தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதற்காக அவர் இங்கிலாந்து அழைக்கப்பட்டுள்ளார்.
ஆம்பூரைச் சேர்ந்தவர்
ந. கருணாநிதி. இவர், இந்து மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்றார். தற்போது வாணியம்பாடியில் உள்ள வாணி கல்வியியல் கல்லூரி முதல்வராகப் பணியாற்றி வருகிறார்.
தமிழாசிரியரான இவர், இங்கிலாந்தில் உள்ள லிவர்பூல் பல்கலைக்கழகத்தில் ஜூன் 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள திருக்குறள் மாநாட்டில் பங்கேற்கிறார்.
மாநாட்டு கருத்தரங்கிற்காக இவர் அனுப்பிய "திருக்குறள் காட்டும் மனித வளமேம்பாடு' என்ற தலைப்பிலான கட்டுரை மாநாட்டு தேர்வுக் குழுவால் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மாநாட்டில் பங்கேற்கவும் அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மாநாட்டில் பங்கேற்பதற்காக தமிழகத்தில் இருந்து 15 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வேலூர் மாவட்டத்திலிருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளது இவர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே இவர் இலங்கையில் நடைபெற்ற திருக்குறள் மாநாட்டிலும் பங்கேற்றுள்ளார்.
2020-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6 மற்றும் 7-ஆம் தேதிகளில் யுனெஸ்கோ சார்பில் பாரீஸில் திருக்குறள் மாநாடு நடைபெற உள்ளது. அந்த மாநாட்டில் "திருக்குறள் ஒரு வாழ்வியல் நெறிக்கான உலகப் பொது நூல்' என்று அறிவிக்கப்பட உள்ளது. அதற்கான தயாரிப்பு மாநாடாக இங்கிலாந்தில் நடக்கும் மாநாடு அமைய உள்ளதாகக் கூறப்படுகிறது. இங்கிலாந்தில் நடைபெற உள்ள திருக்குறள் மாநாட்டில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ள இவருக்கு அகில இந்திய எழுத்தாளர் சங்கத்தினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.