மூலிகை மருந்து விற்பனை முகவராக நியமிப்பதாகக் கூறி, ஆம்பூரைச் சேர்ந்த தோல் தொழிற்சாலை உரிமையாளரிடம் ரூ. 21 லட்சம் பணம் பெற்று மோசடி செய்ததாக முகநூலில் பழக்கமான இளம்பெண் மீது எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
ஆம்பூரில் தோழில் தொழிற்சாலை நடத்தி வருபவர் நாகராஜ். இவரது முகநூலில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த ஏப்ரல் மாதம் நண்பராகியுள்ளார். சில மாதங்களுக்கு முன் நாகராஜை செல்லிடப்பேசியில் தொடர்பு கொண்ட அப்பெண், இணையதளம் மூலமாக மூலிகை மருந்து விற்கும் முகவராக இருக்கும்படியும், அதற்கு ரூ. 5 லட்சம் அனுப்பி வைக்கும்படியும் தெரிவித்தாராம்.
இதற்கு ஒப்புக்கொண்ட நாகராஜ், அவரைத் தேடி வந்த நபர்களிடம் ரூ. 5 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால், பணத்தைப் பெற்றுக்கொண்டு மருந்துகள் அனுப்புவதாகக் கூறிச் சென்ற அவர்கள், பின்னர் மருந்தை அனுப்பவில்லையாம். அத்துடன், கூடுதலாக பணம் செலுத்த வேண்டும் என்றும் கூறி சிறிது சிறிதாக மொத்தம் ரூ. 21.80 லட்சம் வரை வங்கிக் கணக்கு வழியாக பணத்தைப் பெற்றுக் கொண்டனராம். எனினும், நாகராஜை இதுவரை முகவராக நியமிக்காமலும், மருந்துகளையும் அனுப்பாமலும் இருப்பதுடன், தொடர்ந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டாலும் அவர்கள் உரிய பதில் அளிக்காமல் ஏமாற்றி வருவதாக் கூறப்படுகிறது.
இதனால், பாதிக்கப்பட்ட நாகராஜ், வேலூர் எஸ்.பி. அலுவலகத்தில் வியாழக்கிழமை புகார் மனு அளித்தார். அதில், தன்னிடம் பெற்ற ரூ. 21.80 லட்சம் பணத்தை திரும்பப் பெற்றுத் தருவதுடன், பணம் பெற்று மோசடி செய்த இங்கிலாந்து பெண், அவரது ஆட்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இப்புகார் மீது போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.