9 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம்: முதல்வர் உத்தரவு

ஆந்திரத்தில் ஏற்பட்ட லாரி விபத்தில் உயிரிழந்த வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 9 பேரின் குடும்பத்தினருக்குத்  தலா ரூ.1 லட்சம், பலத்த காயம்

ஆந்திரத்தில் ஏற்பட்ட லாரி விபத்தில் உயிரிழந்த வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 9 பேரின் குடும்பத்தினருக்குத்  தலா ரூ.1 லட்சம், பலத்த காயம் அடைந்தோருக்கு ரூ.50 ஆயிரம் வழங்கவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பு:
வேலூர் கல்நார்சம்பட்டி மற்றும் ராமநாய்க்கன்பேட்டை கிராமங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் 31 பேர் ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியில் மாங்காய் பறித்து விட்டு, தனியார் மினி லாரியில் வேலூர் மாவட்டத்துக்கு சனிக்கிழமை  திரும்பிக் கொண்டிருந்தனர்.  அப்போது சித்தூர்  கங்குணி கிராமம், பெரும்பள்ளம் என்ற இடத்தில் லாரி கவிழ்ந்தது. 
 இந்த விபத்தில் மாரீசன்  மகன் சென்றாயன்,  சங்கர் மனைவி  புனிதா,  கண்ணன்  மனைவி   கமலா,  சின்னத்தம்பி மனைவி  செண்பகம்,   தீர்த்தகிரி  மனைவி  மீனாட்சி மற்றும் சம்பத்  மகன்  உமாபதி  ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  சின்னத்தம்பி  மகன்  துளசி,  மோகன் மகன்  முத்து மற்றும்  தருமன்  மகன்  நாராயணன் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்தச் செய்தியை அறிந்தும்,  விபத்தில் 22 பேர் காயமடைந்துள்ளனர் என்ற செய்தியை அறிந்தும் வருத்தமடைந்தேன். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க வேலூர் மாவட்ட நிர்வாகத்துக்கும், மருத்துவமனை அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளேன். 
மீட்புப் பணி:  இந்த விபத்து குறித்து அறிந்தவுடன், இறந்தவர்களின் உடல்களை அடையாளம் கண்டு உடனடியாக தமிழகத்துக்கு கொண்டு வந்து உறவினர்களிடம் ஒப்படைப்பதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வருவாய்த் துறையினர் மற்றும் காவல் துறையினர் கொண்ட  குழு ஒன்றினை ஆந்திர மாநிலத்துக்கு உடனடியாக அனுப்ப உத்தரவிட்டிருந்தேன்.  அதிகாரிகள் விரைவான நடவடிக்கை மேற்கொண்டதில், சித்தூர் மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன், இறந்தவர்களின் உடல்கள் தமிழகம் கொண்டு வரப்பட்டன.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து,  அவர்களுக்கு ஆறுதல் கூறவும், காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் உயரிய சிகிச்சை அளிக்கப்படுவதை  உறுதி செய்யவும் வணிகவரித் துறை அமைச்சர்  வீரமணி,  தொழிலாளர் நலத் துறை அமைச்சர்  நிலோபர் கபில் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோருக்கு உத்தரவிட்டேன்.
 நிவாரண நிதி: இந்த துயரச் சம்பவத்தின் தன்மையையும், இறந்தவர்களின் குடும்ப வறிய நிலையையும் கருத்தில் கொண்டு,  உயிரிழந்த 9 நபர்களின் குடும்பத்துக்கு  தலா ரூ.1 லட்சமும்,  பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரமும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரமும் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து  வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com