பள்ளிகொண்டா அருகே வெட்டுவானம் பகுதியில் சாலையோரம் பேருந்துக்காக நின்று கொண்டிருந்தவர்கள் மீது தனியார் சொகுசு பேருந்து மோதிய விபத்தில் முதியவர் ஞாயிற்றுக்கிழமை இறந்தார். 8 பேர் காயமடைந்தனர்.
ஆந்திர மாநிலம், பங்காரப்பாளையம் அருகே குந்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (85). இவரது உறவினர்கள் பாரதி (65), பலராமன் (65), காவ்யா (21) ஆகியோர் வெட்டுவானம் எல்லையம்மன் கோயிலுக்கு சென்றுவிட்டு, வேலூர் செல்வதற்காக தேசிய நெடுஞ்சாலையோரம் பேருந்துக்காக நின்றுகொண்டிருந்தனர்.
அப்போது, வேலூர் நோக்கி சென்ற தனியார் சொகுசு பேருந்து திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்று கொண்டிருந்தவர்கள் மீது மோதியது.
இதில் காயமடைந்த சுப்பிரமணி வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
பாரதி, பலராமன், காவ்யா, சின்னச்சேரியை சேர்ந்த சேகர் (52), லட்சுமணன் (35) உள்ளிட்ட 8 பேர் காயமடைந்தனர்.
அவர்கள் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து பள்ளிகொண்டா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.