காட்பாடி அருகே சனிக்கிழமை நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணிடம் 15 பவுன் நகையை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.
காட்பாடி அருகே கலசப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் வியாபாரி ரவி. இவரது மனைவி தமிழ்ச்செல்வி (42). இவர்கள் சித்தூர் பேருந்து நிறுத்தம் பகுதியில் உள்ள மண்டபத்தில் நடைபெற்ற உறவினர் திருமண நிகழ்ச்சி பங்கேற்றுவிட்டு இரவு 11 மணியளவில் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது, பைக்கில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் தமிழ்ச்செல்வியின் கழுத்திலிருந்த 15 பவுன் தங்க நகைகளைப் பறித்துச் சென்றனராம். இதுகுறித்த புகாரின்பேரில் காட்பாடி போலீஸார் வழக்குப் பதிவு மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.
இதேபோல், வேலூர் சத்துவாச்சாரியைச் சேர்ந்த ராஜேந்திரனின் மனைவி கீதாஞ்சலியிடம் (35) கடந்த 10-ஆம் தேதி பைக்கில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் 7 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனர். மாவட்டத்தில் கடந்த 15 நாள்களில் மட்டும் 8-க்கும் மேற்பட்ட நகை பறிப்பு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. நகை பறிப்பில் ஈடுபடுவோரை கைது செய்ய போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.