காவேரிபாக்கம் அருகே சாலையை கடக்க முயன்ற போது கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில் தனியார் பள்ளிப் பணியாளர் இறந்தார்.
காவேரிபாக்கத்தைச் சேர்ந்தவர் மாதவன் (45). இவர், அப்பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் பாதுகாவலராகப் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாதவன், கடப்பேரியில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றார்.
அப்போது அவ்வழியே பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி வந்த கன்டெய்னர் லாரி மாதவன் மீது மோதி, கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் மாதவன் நிகழ்விடத்திலேயே இறந்தார். லாரி ஓட்டுநர் திருப்பத்தூரைச் சேர்ந்த சுந்தர்ராஜ் (62) காயமடைந்தார்.
இதுகுறித்து காவேரிபாக்கம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.