சென்னை சட்டக் கல்லூரி மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, வேலூரில் சட்டக் கல்லூரி மாணவர்கள் செவ்வாய்க்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை பாரிமுனையில் செயல்பட்டு வரும் அம்பேத்கர் சட்டக் கல்லூரியை திருவள்ளூர் மாவட்டம் புதுப்பாக்கம், காஞ்சிபுரம் மாவட்டம் பட்டறை பெரும்பாக்கத்துக்கும் இடமாற்றம் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டக் கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து 16 நாள்களாக உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்போராட்டத்துக்கு மாநிலம் முழுவதும் சட்டக் கல்லூரி மாணவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதன்படி, வேலூர் காட்பாடியில் உள்ள சட்டக் கல்லூரி மாணவர்களும் இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து செவ்வாய்க்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், 40 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது, வேலூர் சட்டக் கல்லூரியில் குடிநீர், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரியும், ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ள கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்கக் கோரியும் மாணவர்கள் வலியுறுத்தினர்.