உதயேந்திரம் பேரூராட்சியில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினின் 65-ஆவது பிறந்த நாளையொட்டி, பேரூர் திமுக சார்பில் நல உதவிகள் மற்றும் உறுப்பினர்கள் அட்டை வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, பேரூர் திமுக செயலாளர் செல்வராஜ் தலைமை வகித்தார். அவைத்தலைவர் சான்பாஷா, மாவட்டப் பிரதிநிதி அசோகன், நிர்வாகிகள் அம்பலவாணன், மீர்முகமது கனி, தேவராஜ், வளர்மதி மேகநாதன், தனசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆதி திராவிடர் நலக்குழு நிர்வாகி தென்றல் தமிழரசன் வரவேற்றார்.
வேலூர் மேற்கு மாவட்டச் செயலாளர் முத்தமிழ்செல்வி, முன்னாள் மாவட்டச் செயலாளர் தேவராஜ் ஆகியோர் மேட்டுப்பாளையம் பகுதியில் திமுக கொடியேற்றி இனிப்பு வழங்கினர். பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில், இளைஞரணியினர் 200 பேருக்கு புதிய உறுப்பினர் அட்டைகள், ஏழைகளுக்கு இலவச சேலை, வாணியம்பாடி பெருமாள்பேட்டையில் இயங்கிவரும் கருணை இல்லத்துக்கு அரிசி மூட்டை மற்றும் சோப்புகள் உள்ளிட்டவற்றை வழங்கினர். தொடர்ந்து, ஆயிரம் பேருக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.
மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வடிவேல், அருணகிரி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஆற்காடு ஒன்றியத்தில்...
ஆற்காடு கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா, நல உதவிகள் வழங்குதல் மற்றும் பொதுக்கூட்டம் முப்பது வெட்டி கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது
கூட்டத்துக்கு, வேலூர் கிழக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளரும், எம்எல்ஏவுமான ஜெ.எல்.ஈஸ்வரப்பன் தலைமை வகித்தார். மாவட்டத் துணைச் செயலாளர் ஏ.கே.சுந்தரமூர்த்தி முன்னிலை வகித்தார். ஒன்றியச் செயலாளர் எம்.வி பாண்டுரங்கன் வரவேற்றார்.
திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன், முன்னாள் மத்திய இணையமைச்சர் சா. ஜெகத்ரட்சகன், வேலூர் கிழக்கு மாவட்டச் செயலாளரும், எம்எல்ஏவுமான ஆர்.காந்தி ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பல்வேறு நல உதவிகளை வழங்கிப் பேசினர். இதில், மாவட்ட அவைத் தலைவர் அசோகன், ஆற்காடு நகரச் செயலாளர் ஏ.வி.சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னாள் ஊராட்சித் தலைவர் ராஜா நன்றி கூறினார்.