வாலாஜாபேட்டை அருகே பைக் திருடியதாக தாக்கப்பட்ட இளைஞர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
வாலாஜாபேட்டையை அடுத்த பாக்குபேட்டை பகுதியைச் சேர்ந்த கோவிந்தனின் மகன்கள் கலைச்செல்வன், கார்த்தி. இதில் கலைச்செல்வனின் பைக் சில நாள்களுக்கு முன் திருடு போனது. இதுதொடர்பாக வாலாஜா அம்பேத்கர் நகரைச் சேர்ந்த நாகராஜ் மகன் சக்திவேல் ( 18) மீது கலைச்செல்வனுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து, கலைச்செல்வன் தனது சகோதரர் கார்த்தி மற்றும் நண்பர் சதீஷ்குமாரை அழைத்துக் கொண்டு, சக்திவேலின் வீட்டுக்குச் சென்றார்.
பின்னர், சக்திவேலை வீடு புகுந்து கடத்திய, அவர்கள் ஆட்டோவில் தங்கள் பகுதிக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து, திருடிய பைக்கை திருப்பிக் கொடுத்து விடுமாறு கூறி, சக்திவேலை அடித்து உதைத்துள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அவரை ஆட்டோவில் தூக்கிச் சென்று, அவரது வீட்டு முன்பு வீசி விட்டு
தப்பியுள்ளனர்.
சக்திவேலின் பெற்றோர், அவரை மீட்டு வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சக்திவேல் உயிரிழந்தார். இதுகுறித்து வாலாஜாபேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து, கலைச்செல்வன், அவரது சகோதரர் கார்த்தி, நண்பர் சதீஷ்குமார் ஆகிய 3 பேரையும் திங்கள்கிழமை கைது செய்தனர்.