ஜோலார்பேட்டை மற்றும் திருப்பத்தூர் அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்தும், ரயிலில் அடிபட்டும் இருவர் இறந்தனர்.
ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் உள்ள 4-ஆவது நடைமேடையில் செவ்வாய்க்கிழமை சுமார் 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் சென்னை செல்லும் ரயிலில் ஏறுவதற்காக ஓடிய போது தவறி விழுந்து பலத்த காயமடைந்தார்.
இதையடுத்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸார் அவரை மீட்டு, திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் இறந்தார். இறந்தவர் கருப்பு பேண்ட், வெள்ளை நிற சட்டை
அணிந்திருந்தார்.
மற்றொரு விபத்து... திருப்பத்தூர் அருகே மொளகரம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜி என்கிற புட்டன்(70). இவர், திருப்பத்தூர்-காக்கங்கரை ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற போது அவ்வழியாகச் சென்ற ரயிலில் அடிபட்டு நிகழ்விடத்திலேயே இறந்தார்.
தகவலறிந்து அங்கு சென்ற ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸார் சடலத்தை மீட்டு, திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த இரு விபத்துகள் குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.