அரக்கோணம்-சென்னை இடையே 15 நிமிடங்களுக்கு ஒரு மின்சார ரயில் இயக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை தெற்கு ரயில்வே பொது மேலாளரிடம் அரக்கோணம் ரயில் பயணிகள் சங்கத்தினர் அளித்தனர்.
அரக்கோணம் ரயில்வே பொறியியல் பணிமனை மற்றும் ரயில்வே "பிளாஷ்பட் வெல்டிங்' தொழிற்சாலை ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொள்ள செவ்வாய்க்கிழமை அரக்கோணம் வந்த பொது மேலாளர் குல்சிரேஷ்டாவிடம் அரக்கோணம் ரயில் பயணிகள் சங்கத் தலைவர் நைனாமாசிலாமணி, செயலர் ரகுநாதன் ஆகியோர் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.
மனு விவரம்: அரக்கோணம்-காஞ்சிபுரம் ரயில் பாதையில் அரக்கோணத்தில் இருந்து தக்கோலம் வரையிலான மின்மயமாக்கல் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். அரக்கோணம் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் நடைமேடை நீட்டிப்புப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். அரக்கோணத்தில் இருந்து சென்னைக்கு 15 நிமிடங்களுக்கு ஒரு மின்சார ரயில்கள் இயக்கப்பட வேண்டும். அரக்கோணம்-சென்னை இடையே இயக்கப்படும் மின்சார ரயில்கள் அனைத்தும் 12 பெட்டிகள் கொண்டதாக மாற்ற வேண்டும். சென்னை-பெங்களூரு இடையே அறிவிக்கப்பட்டு, செயல்படுத்தப்படாமல் இருக்கும் விரைவு ரயிலை விரைவில் இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறிப்பிடப்பட்டிருந்தன.
மனுவைப் பெற்றுக் கொண்ட பொது மேலாளர் விரைவில் நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார்.