வாணியம்பாடியில் டிராக்டர் மோதியதில் மின் கம்பம் சேதமடைந்தது. இதில் பொதுமக்கள் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.
வாணியம்பாடி கச்சேரி ரோடு-ஆசிரியர்நகர் சாலையில் புதன்கிழமை பிற்பகல் 1 மணியளவில் சென்று கொண்டிருந்த டிராக்டர் திடீரென கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்தின் மீது மோதியது. இதில் மின் கம்பம் உடைந்து மின் கம்பிகள் கீழே தொங்கின. அப்போது அவ்வழியாக நடந்து சென்ற பொதுக்கள் அலறியடித்து ஓடினர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தவுடன், அதிகாரிகள் மின் விநியோகத்தை துண்டித்தனர். இதையடுத்து மின் ஊழியர்கள், சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி, புதிய மின்கம்பத்தை பொருத்தினர்.