நிலுவை வாடகைகளை வசூலிக்கும் பணியில் மாநகராட்சி தீவிரம்

மாநகராட்சிக்குச் சொந்தமான கடை வணிகர்களிடம் இருந்து நிலுவை வாடகைகளை வசூலிக்கும் பணியை மாநகராட்சி நிர்வாகம்

மாநகராட்சிக்குச் சொந்தமான கடை வணிகர்களிடம் இருந்து நிலுவை வாடகைகளை வசூலிக்கும் பணியை மாநகராட்சி நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது. அவ்வாறு வாடகை செலுத்தாத கடைகளை பூட்டி "சீல்' வைக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வேலூர்  மாநகராட்சிக்குச் சொந்தமாக 1,542 கடைகள் உள்ளன. இக்கடைகளுக்கு 9 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2016-ஆம் ஆண்டு புதிய வாடகை நிர்ணயிக்கப்பட்டன. ஆனால், அந்த வாடகை பிற மாநகராட்சிகளைக் காட்டிலும் மிக அதிகமாக இருப்பதாகவும், வாடகைத் தொகையை சதவீத அடிப்படையில் நிர்ணயிக்கவும் வணிகர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். மேலும், இப்பிரச்னையை அடுத்து வாடகைத் தொகை செலுத்தாமலும் இருந்தனர். 
இதன்படி, கடந்த பிப்ரவரி மாதம் வரை சுமார் ரூ. 14 கோடி வாடகைத் தொகை செலுத்தப்படாமல் இருப்பது கணக்கிடப்பட்டதை அடுத்து நிலுவை வாடகையை உடனடியாகச் செலுத்தக் கோரி மாநகராட்சி நிர்வாகம் வணிகர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதைத் தொடர்ந்து, வணிகர்களின் வேண்டுகோளை ஏற்று கடந்த 2016-ஆம் ஆண்டுக்கான நிலுவைத் தொகையான ரூ. 8 கோடியை மட்டும் மார்ச் 4-ஆம் தேதிக்குள் செலுத்த மாநகராட்சி நிர்வாகம் அனுமதியளித்தது.
ஆனால், மார்ச் 4-ஆம் தேதிக்குள் வணிகர்கள் ஒரு சிறு தொகையைக்கூட செலுத்தவில்லை. 
இதையடுத்து நிலுவைகளை செலுத்தாத கடைகளை பூட்டி "சீல்' வைக்கும் நடவடிக்கையை மாநகராட்சி தொடங்கியது. இதன்படி, கடந்த 5-ஆம் தேதி நேதாஜி மார்க்கெட் பகுதியில் ஒரு சில கடைகளை பூட்டி அதிகாரிகள் "சீல்' வைத்தனர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் நிலுவை வாடகைகளை செலுத்தியதால் கடை மீண்டும் திறந்து விடப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, தற்போது மாநகராட்சி முழுவதும் நிலுவை வாடகைகளை வசூலிக்கும் பணியை மாநகராட்சி அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர். அவ்வாறு வாடகை செலுத்தாத கடைகளைப் பூட்டி "சீல்' வைக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இதனடிப்படையில், வணிகர்கள் நாள்தோறும் நிலுவை வாடகைகளை மாநகராட்சியில் செலுத்தி வருவதாக மாநகராட்சி ஆணையர் சி.விஜயகுமார் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், நிலுவை வாடகைகளைச் செலுத்த மீண்டும் அவகாசம் ஏதும் அளிக்கப்படவில்லை. ஆனால், வணிகர்களே நிலுவை வாடகைகளை தொடர்ந்து செலுத்தி வருவதால் "சீல்' வைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதில்லை. நிலுவை வாடகைகள் செலுத்தாமல் உள்ள கடை வணிகர்களுக்கும் உடனடியாக வாடகையை செலுத்த அறிவுறுத்தப்பட்டு வருகிறது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com