வாணியம்பாடி அருகே நிகழ்ந்த இரு வேறு விபத்துகளில் 2 பேர் உயிரிழந்தனர்.
வாணியம்பாடி அருகேயுள்ள நாட்டறம்பள்ளி வீராகுமேடு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (40) ஆட்டோ ஓட்டுநர். இவர் புதன்கிழமை காலை தனது ஆட்டோவில் பயணிகள் 2 பேரை ஏற்றிக்கொண்டு, வாணியம்பாடி நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.
திருப்பத்தூர் சர்க்கரை ஆலை எதிரே வந்த போது, பின்னால் வேகமாக வந்த கார் ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோ கவிழ்ந்ததில் ஓட்டுநர் வெங்கடேசன் நிகழ்விடத்திலேயே இறந்தார். ஆட்டோவில் பயணம் செய்த ஓய்வு பெற்ற சர்க்கரை ஆலை ஊழியர் கோபிகேசவன் (60), இவரது மகள் கோமதி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். படுகாயமடைந்த இருவரையும் அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தகவலறிந்த நாட்டறம்பள்ளி போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று, விபத்தில் இறந்த வெங்கடேசனின் உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து நாட்டறம்பள்ளி போலீஸார் வழக்குப்பதிவு செய்து, சென்னை கொளத்தூரை சேர்ந்த கார் ஓட்டுநர் அட்வினை(25) கைது செய்தனர்.
மற்றொரு சம்பவம்: நாட்டறம்பள்ளி சின்னகிரிசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன் (53). இவர் நாட்டறம்பள்ளி அருகே உள்ள பெட்ரோல் நிலையத்தில் வேலை செய்து வந்தார். இவர் செவ்வாய்க்கிழமை இரவு நாட்டறம்பள்ளியிலிருந்து சின்னகிரி சமுத்திரம் நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது சடலகுட்டை ஆத்துமேடு அருகே எதிரே வந்த ஆட்டோ, பைக் மீது மோதியது. இதில் மகேந்திரன் தலையில் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே இறந்தார்.
இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீஸார், ஜோலார்பேட்டையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் வடிவேல் குமரன் (30) மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.