குறவர் சமுதாய மக்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்காததைக் கண்டித்து திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலக வாயிலில் செவ்வாய்க்கிழமை தர்னா நடைபெற்றது.
திருப்பத்தூர் பகுதிகளில் ராச்சமங்களம், பாச்சல், கந்திலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குறவர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் ஆதிதிராவிடர் என்ற அடிப்படையில் ஜாதி சான்றிதழ் வழங்கக் கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.
இதையடுத்து திருப்பத்தூரில் வருவாய்த் துறையினர் முறையாக விசாரணை செய்து உரியவர்களுக்கு ஆதிதிராவிடர் என்ற சான்றிதழை வழங்கி வந்தனர்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை திருப்பத்தூரை அடுத்த ராச்சமங்களம் கிராமத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட குறவர் இன மக்கள், தங்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்கக் கோரி மக்கள் கணினி மையத்தில் பதிவு செய்ததாகவும், பதிவு செய்த மனுக்கள் மீது விசாரணை செய்யாமல் வட்டாட்சியர் நிராகரித்து விடுவதாகவும் கூறி வட்டாட்சியர் அலுவலகம் முன் தர்னாவில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த திருப்பத்தூர் நகர போலீஸார் தர்னாவில் ஈடுபட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, ஜாதி சான்றிதழ் வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
இதுகுறித்து வட்டாட்சியர் டி.எஸ்.சத்தியமூர்த்தியிடம் கேட்டதற்கு, சார்-ஆட்சியர் மூலம் ஆட்சியருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. முறையான விசாரணைக்குப் பிறகு சான்றிதழ் வழங்குவது குறித்து முடிவு செய்யப்படும் என்றார் அவர்.