வேலூரில் ரூ. 1.40 லட்சம் வாடகை நிலுவை வைத்திருந்த இனிப்புக் கடையை பூட்டி மாநகராட்சி அதிகாரிகள் "சீல்' வைத்தனர்.
வேலூர், புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சிக்குச் சொந்தமான 1,542 கடைகள் உள்ளன. இக்கடைகளுக்கான மாதாந்திர வாடகை 2 தவணைகளாக வசூலிக்கப்படுகிறது. தற்போது மார்ச் மாத இறுதியையொட்டி, நிலுவையில் உள்ள வாடகையை வசூலிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக, ஏற்கெனவே சம்பந்தப்பட்ட கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தது. இதில், 80 சதவீத கடைகளின் வாடகை வசூலிக்கும் பணி முடிந்த நிலையில், மீதமுள்ள 20 சதவீத கடைகளுக்கான வாடகைகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், மாநகராட்சி ஆணையர் சி.விஜயகுமார் உத்தரவின் பேரில் 2-ஆவது மண்டல வருவாய் ஆய்வாளர் கதிர்வேல், வருவாய் உதவியாளர்கள் வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் ஆய்வு செய்தனர்.
அப்போது, ரூ. 1.40 லட்சம் வாடகை நிலுவை வைத்திருந்த இனிப்புக் கடையை பூட்டி அதிகாரிகள் "சீல்' வைத்தனர். மேலும், நிலுவை வாடகையை உடனடியாக செலுத்தி "சீல்' வைப்பு நடவடிக்கைகளை தவிர்த்திடுமாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.