அரக்கோணம் அருகே உள்ள மத்திய தொழிற் பாதுகாப்புப் படை அலுவலக வளாகத்தில் உள்ள கண்னி பிரிவில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டதில் அங்கிருந்த கணினிகள் மற்றும் குளிர்சாதனக் கருவிகள் தீயில் எரிந்து நாசமாயின.
அரக்கோணத்தை அடுத்த தக்கோலம் அருகே நகரிகுப்பத்தில் மத்திய தொழிற்பாதுகாப்புப் படை மண்டலப் பயிற்சி மையம் உள்ளது. இம்மையத்தின் கணினிக் கட்டுப்பாட்டு அறையில் வியாழக்கிழமை மதியம் சுமார் 2.45 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அங்கிருந்த மின்சாதனங்கள் எரியத் தொடங்கியதும், பணியில் இருந்த அலுவலர்கள் அந்த அறையை விட்டு வெளியே ஓடி வந்தனர். அரக்கோணம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அரை மணி நேரமாகியும் வராததால் சிஐஎஸ்எஃப் படை வீரர்களே தீயை அணைத்தனர்.
இதில், அலுவலகக் கணினிகள் மற்றும் குளிர்சாதனப் பொருள்கள் முழுவதும் எரிந்து நாசமாகின. மின் கோளாறே இவ்விபத்துக்கு காரணம் என தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.