திருப்பத்தூர் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் நகராட்சிகளின் மண்டல நிர்வாக இயக்குநர் விஜயகுமார் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
நகராட்சி குப்பைக் கிடங்கு, நகராட்சி அலுவலகம் மற்றும் அனைத்து வார்டுகளிலும் ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, வீரபத்திர முதலியார் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள காய்கறி தோட்டம், உயரம் தயாரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ள செடிகள் ஆகியவற்றைப் பார்வையிட்டார். திருப்பத்தூர் நகர் பகுதிகளில் கொசு உற்பத்தியைத் தடுக்க ஆலோசனைகளை வழங்கினார். மேலும், கம்பூசியா என்ற வகையான மீன்களை முதல்முறையாக நகராட்சி பூங்காவில் உள்ள நீர்த்தொட்டியில் விட்டார்.
பின்னர் அவர் கூறியதாவது: திருப்பத்தூர் பகுதியில் தற்போது டெங்கு நோய் பரப்பும் கொசு புழுக்களை ஒழிக்க கம்பூசியா எனப்படும் மீன் வகை ஒரு சில பகுதிகளில் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த மீன்கள் கொசு புழுக்கள் மற்றும் கொசுவை மட்டும் உண்ணும்.
பொதுமக்கள் வீடுகளில் உள்ள குடிநீர்த் தொட்டி உள்ளிட்ட பகுதிகளில் விட வேண்டுமென்றால் நகராட்சி ஊழியர்கள் இதை இலவசமாக வழங்குவார்கள் என்றார் அவர். இந்த ஆய்வின்போது நகராட்சி ஆணையர் இரா.சந்திரா, சுகாதார அலுவலர் ராஜரத்தினம், ஆய்வாளர் விவேக் ஆகியோர் உடனிருந்தனர்.