அரக்கோணம் அருகே செய்யூர் கிராமத்தில் மாணவ, மாணவிகள் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோர் கடந்த 3 தினங்களுக்கும் மேலாக மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அரக்கோணம் அருகே செய்யூர் ஊராட்சியில் காலனிப் பகுதியில் கடந்த 3 தினங்களுக்கு மேலாக பலருக்கு மர்மக் காய்ச்சல் இருந்து வருகிறது. குறிப்பாக, மேட்டுத் தெரு, பெருமாள் கோயில் தெரு ஆகிய தெருக்களில் முதியவர்கள், 13 மாணவிகள், 4 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இவர்களில் பலர் வியாழக்கிழமை அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு, அவர்களுக்கு ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டு உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டனர். பின்னர், சிறிது நேரத்தில் வீட்டுக்கு அனுப்பப்பட்டு விட்டதாகக் கூறப்படுகிறது. இதேநிலை வெள்ளிக்கிழமையும் தொடர்ந்துள்ளது.
காய்ச்சல் காரணமாக பல மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருப்பதாகவும் தெரிகிறது.
தற்போது மாவட்டம் முழுவதும் டெங்கு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில் இந்த விழிப்புணர்வுப் பணிகள் செய்யூர் கிராமத்தில் நடைபெறவில்லை எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து வட்டார மருத்துவ அலுவலர் ராஜயாமினியை கேட்டதற்கு, செய்யூரில் மர்மக் காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து இதுவரை தெரியவரவில்லை. உடனே விசாரித்து நடவடிக்கை எடுப்பதாகவும் சனிக்கிழமை மருத்துவக் குழுவினருடன் செய்யூர் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவச் சிகிச்சை அளிப்பதாகவும் தெரிவித்தார்.