கடப்பா அருகே காய்கறி ஏற்றிச் செல்லும் மினிலாரியில் தனி அறை ஏற்படுத்தி திரைப்பட பாணியில் செம்மரக் கட்டைகளைக் கடத்திய 3 பேரை சிறப்பு போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து அவர்கள் மேலும் கூறியதாவது: கடப்பா அருகே ரயில்வே கோடூரு அருகில் வியாழக்கிழமை நள்ளிரவு செம்மரக்கடத்தல் தடுப்பு சிறப்புப் பிரிவு காவல்துறை அதிகாரிகள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு வாகனம் காய்கறித் தட்டுகளுடன் வந்தது. அதை நிறுத்தி சோதனை செய்ததில் அந்தத் தட்டுகள் காலியாக இருந்தன.
அந்த வாகனத்தில் இருந்த 3 பேரிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தகனர். இதையடுத்து வாகனத்தை மற்றொரு முறை முழுவதும் சோதனை செய்தனர். அப்போது, வாகனத்தின் மேற்புரம் ஒரு அறையை ஏற்படுத்தி அதில் செம்மரக்கட்டைகளை கர்நாடக மாநிலம் ஒஸ்கோட்டிற்கு கடத்த முயன்றது தெரிய வந்தது.
இதையடுத்து, கடப்பாவைச் சேர்ந்த அவர்கள் 3 பேரையும் கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். செம்மரக் கடத்தலில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட்ட போதிலும் திரைப்பட பாணியில் கடத்தல்காரர்களும் பல்வேறு முறைகளில் கடத்தலில் ஈடுபட முயன்று வருகின்றனர். இதைக் கட்டுப்படுத்த வேறு சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி காந்தாராவ் தெரிவித்தாக போலீஸார் கூறினர்.