அரக்கோணம் ரயில் நிலையம் அருகே சிக்னல் கோளாறு காரணமாக சென்னை- பெங்களூரு விரைவு ரயில் உள்ளிட்ட மூன்று விரைவு ரயில்கள் சனிக்கிழமை ஆங்காங்கே நிறுத்தப்பட்டு, ஒரு மணி நேரம் தாமதமாகச் சென்றன.
சென்னை - அரக்கோணம் ரயில் மார்க்கத்தில் புளியமங்கலம் ரயில் நிலையத்தில் சனிக்கிழமை மதியம் 2.30 மணிக்கு திடீரென சிக்னல் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, அவ்வழியே வந்த சென்னை- பெங்களூரு விரைவு ரயில், சென்னை - கோயமுத்தூர் இண்டர்சிட்டி விரைவு ரயில், சென்னை - திருப்பதி விரைவு ரயில், சென்னை - அரக்கோணம் மின்சார ரயில் ஆகியவை புளியமங்கலம், திருவாலங்காடு ரயில் நிலையங்களுக்கிடையே ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதையறிந்த அரக்கோணம் ரயில் நிலைய சிக்னல் பிரிவு அலுவலர்கள் விரைந்து சென்று தற்காலிகமாகமாக சிக்னலை சரிசெய்தனர். இதையடுத்து, ஒரு மணி நேர தாமதத்துக்குப் பிறகு ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்த ரயில்கள், அனைத்தும் மீண்டும் புறப்பட்டுச் சென்றன. ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாயினர்.