ஜோலார்பேட்டை கூட்டுறவு கட்டட சங்கத்தில் வைப்புத் தொகை முதிர்வடைந்தும் பணம் கிடைக்காத விரக்தியில் மண்ணெண்ணெய் ஊற்றி தொழிலாளி தற்கொலைக்கு முயன்றார்.
ஜோலார்பேட்டை கோடியூரில் உள்ள பாதர் கெசு சாலையில் கூட்டுறவு கட்டட சங்கம் இயங்கி வருகிறது. இங்கு கோடியூரை அடுத்த சுண்ணாம்பு காளை பகுதியைச் சேர்ந்த தொழிலாளி சங்கர் (47) கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் வைப்புத் தொகையாக ரூ. 5 லட்சம் செலுத்தினார். வைப்பு தொகையின் காலம் கடந்த பிப்ரவரி மாதமே முதிர்வடைந்தும் சங்கருக்கு பணத்தை தரவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் விரக்தியடைந்த சங்கர் கடந்த ஒரு மாதத்துக்கு முன் மண்ணெண்ணெய் கேனுடன் அங்கு சென்று தற்கொலைக்கு முயன்றார். ஓரிரு மாதங்களுக்குள் பணத்தை தருவதாக அதிகாரிகள் தெரிவித்ததை அடுத்து அவர் அங்கிருந்து சென்றார்.
இந்நிலையில் அதிகாரிகள் கூறியபடி பணம் கிடைக்காததால் செவ்வாய்க்கிழமை ஜோலார்பேட்டை கூட்டுறவு கட்டட சங்கத்துக்கு சங்கர் தனது மனைவி வேலாவுடன் சென்றார். தனது மகளின் திருமணம் அடுத்த மாதம் நடக்க இருப்பதால் வைப்புத் தொகையை உடனடியாக வழங்கக் கோரி மண்ணெண்ணெயை தனது உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.
தகவலறிந்த ஜோலார்பேட்டை போலீஸார் அங்கு சென்று சங்கரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
சங்கருக்கு கொடுக்க வேண்டிய முழுப் பணத்தையும் இம்மாதம் இறுதிக்குள் கொடுப்பதாக சங்கச் செயலாளர் சாந்தகுமார் எழுத்துப்பூர்வமாக தெரிவித்ததை அடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.