ஆந்திர செம்மரக் கடத்தல்காரர்கள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ. 1 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என்று செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறை ஐ.ஜி. காந்தாராவ் தெரிவித்தார்.
திருப்பதியில் உள்ள இப்பிரிவின் அலுவலகத்தில் அவர் இது குறித்து செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதது:
ஆந்திரத்தில் வளர்ந்து வரும் செம்மரக் கட்டைகளை வெட்டும் கடத்தல்காரர்கள் அவற்றை வெளிநாட்டிற்குக் கடத்தி நம் நாட்டின் வளத்தைக் கொள்ளையடித்து வருகின்றனர். இதைக் கட்டுப்படுத்த ஆந்திர அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தும் அவை பலனளிக்கவில்லை. செம்மரம் வெட்ட வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
எனவே, செம்மரம் வெட்ட வரும் தொழிலாளிகள், மேஸ்திரிகள், அவற்றை வாகனங்களில் கொண்டு செல்வோர், கிடங்குப் பாதுகாவலர்கள், வெளிநாட்டிற்கு கடத்தும் ஆட்கள், வெளிநாட்டில் உள்ள கடத்தல்காரர்கள் ஆகியோர் குறித்து பொதுமக்களுக்குத் தகவல் தெரிய வந்தால் அவர்கள் உடனடியாக செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கலாம். மக்கள் இந்தப் பிரிவுடன் இணைந்து செயல்பட வேண்டும். ஆந்திர மாநிலத்தில் உள்ள கடத்தல்காரர்கள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என்று அவர் கூறினார்.