குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
பேர்ணாம்பட்டை அடுத்த கள்ளிச்சேரி, மலையடிவாரத்தைச் சேர்ந்த இளங்கோவின் மகன் விக்னேஷ் (28). இவர், பல்வேறு இருசக்கர வாகனங்களை திருடிய வழக்குகளில் தொடர்புடையவர். இந்நிலையில், ஒரு திருட்டு வழக்கு தொடர்பாக குடியாத்தம் நகர போலீஸார் விக்னேஷை திங்கள்கிழமை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் கழிப்பறைக்குச் செல்வதாகக் கூறி விட்டுச் சென்றாராம். நீண்ட நேரமாகியும் அவர் வராததால் போலீஸார் கழிப்பறைக்குச் சென்று பார்த்துள்ளனர். அங்கு விக்னேஷ், தான் வைத்திருந்த பிளேடால் கழுத்தை அறுத்துக் கொண்டு, தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. உடனடியாக அவர் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.