அரக்கோணம் அருகே ரயிலில் 15 சவரன் தங்க நகைகளைத் திருடியதாக வடமாநில இளைஞரை ரயில்வே போலீஸார் கைது செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம், கடையநல்லூரைச் சேர்ந்த தர்மராஜின் மனைவி ஜெயபத்மாவதி (58). இவர், திருப்பதியில் சாமி தரிசனம் முடித்துவிட்டு சப்தகிரி விரைவு ரயிலில் கடந்த ஜூன் மாதம் 13-ஆம் தேதி சென்று கொண்டிருந்தார். திருத்தணி-அரக்கோணம் இடையே சென்றபோது, மர்ம நபர் ஒருவர் ஜெயபத்மாவதியின் கழுத்தில் இருந்த 15 சவரன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு ஓடும் ரயிலில் இருந்து இறங்கி தப்பியோடினார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த அரக்கோணம் ரயில்வே போலீஸார் அந்த நபரைத் தேடி வந்தனர். இந்நிலையில், ஜோலார்பேட்டை அருகே தங்கச் சங்கிலி பறிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட மத்தியப் பிரதேச மாநிலம், சிந்த்வாரா மாவட்டம், லத்திகாட்டைச் சேர்ந்த உத்தம் படேல் (34), ஜெயபத்மாவதியிடமும் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து வேலூர் மத்திய சிறையில் இருந்த அவரிடம், நீதிமன்ற உத்தரவு பெற்று போலீஸார் விசாரணை நடத்தினர்.
அதில், உத்தம்படேல், அந்த தங்கச் சங்கிலியை உத்தரப் பிரதேசம், ஷாம்லி மாவட்டம், கான்பூர் கலான் என்ற கிராமத்தில் விற்றது தெரியவந்து. ரூ. 1.75 லட்சம் மதிப்புள்ள அந்த நகையை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும், இவ்வழக்கில் அவரை மீண்டும் கைது செய்து நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.