வாலாஜாபேட்டை வன்னிவேடு ஊராட்சிக்கு உள்பட்ட ரபி நகர் குடியிருப்புப் பகுதியில் உள்ள செல்வ விநாயகர் கோயில் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி, அதிகாலை 5 மணியளவில் யாக சாலை பூஜை, நாடி சந்தனம், தத்துவார்ச்சனை, அவபிரத யாகம், யாத்ரா தானம், மகா பூர்ணா ஹுதி, தீபாராதனை, கலச புறப்பாடு ஆகியன நடைபெற்றன.
தொடர்ந்து, 7.30 மணியளவில் செல்வ விநாயகர் கோயில் கோபுர கலசத்துக்கு வேத மந்திரங்கள் ஓத புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர், முருகர், வள்ளி, தெய்வானை, மகாவிஷ்ணு, தட்சிணாமூர்த்தி, நவக்கிரக மூர்த்திகள், துர்கையம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும், மூலவர் செல்வ விநாயகருக்கும் மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
மேலும், நண்பகல் 12.30 மணியளவில் மூலருக்கு சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை ஆகியன நடைபெற்றன. மாலை 5 மணியளவில் செல்வ விநாயகர் வீதிஉலா நடைபெற்றது.
விழாவில், ராணிப்பேட்டை எம்எல்ஏ ஆர்.காந்தி, வன்னிவேடு ஊராட்சி முன்னாள் தலைவர் வி.சி.சக்திவேல்குமார், நகர்மன்ற முன்னாள் தலைவர் எஸ்.வேதகிரி மற்றும் வாலாஜாபேட்டை, ரபி நகர் குடியிருப்பு வாசிகள் பங்கேற்று வழிபட்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினர், பொதுமக்கள் செய்திருந்தனர்.