ஆம்பூர் அருகே செவிலியர் வீட்டில் 20 சவரன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
ஆம்பூர் அருகே ஆலாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சரஸ்வதி (55). இவர், ஆம்பூர் அரசு மருத்துவமனை உதவி செவிலியராகப் பணியாற்றி வருகிறார். இவரது கணவர் இறந்துவிட்டதால் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். வியாழக்கிழமை இரவு வீட்டை பூட்டிக் கொண்டு பணிக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்குச் சென்றார். பிறகு வெள்ளிக்கிழமை காலை வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. பீரோ உடைக்கப்பட்டு 20 சவரன் தங்க நகைகள், ரூ. 30 ஆயிரம் ரொக்கம், பட்டுப் புடவைகள், வெள்ளிப் பொருள்கள் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் ஆம்பூர் டி.எஸ்.பி. (பொறுப்பு) பிரகாஷ்பாபு, ஆம்பூர் கிராமிய ஆய்வாளர் கோகுல்ராஜ் மற்றும் போலீஸார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.