பெண்ணை கத்தியால் குத்திக் கொன்ற லாரி ஓட்டுநருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து வேலூர் மாவட்ட கூடுதல் விரைவு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.
காஞ்சிபுரம் மாவட்டம், முசரவாக்கத்தைச் சேர்ந்தவர் சிவா (53). இவர், செங்கல் சூளையில் லாரி ஓட்டுநராகப் பணியாற்றுகிறார். இவருக்கு மனைவி, 3 மகள்கள் உள்ளனர். இவருக்கும், வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், திருப்பாக்குட்டையைச் சேர்ந்த சின்னப்பொன்னுவுக்கும் (40) சில ஆண்டுகளுக்கு முன் தவறான தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் திருமணம் செய்யாமலேயே குடும்பம் நடத்தி வந்தனர்.
அப்போது, சின்னப்பொன்னுவுக்கு சொந்தமான வீட்டை தனது
3 மகள்களின் பெயருக்கும் எழுதித்தரும்படி சிவா தொல்லை கொடுத்து வந்தாராம். மேலும், அவரது நடத்தையிலும் சந்தேகம் கொண்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும் தெரிகிறது. இதன்படி, கடந்த 2010 செப்டம்பர் 20-ஆம் தேதி ஏற்பட்ட மோதலில் ஆத்திரமடைந்த சிவா, சின்னப்பொன்னுவை கத்தியால் குத்தி கொலை
செய்தார்.
இதுகுறித்து திருவலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து சிவாவை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை வேலூர் மாவட்ட கூடுதல் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குணசேகரன், குற்றம்சாட்டப்பட்ட சிவாவுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ. 2 ஆயிரம் அபராதமும் விதித்து வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தார். தண்டனை விதிக்கப்பட்ட சிவா, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.