ஆம்பூர் அருகே மின்கம்பியில் சிக்கி உயிரிழந்த குரங்கிற்கு இளைஞர்கள் திங்கள்கிழமை இறுதிச் சடங்கு செய்தனர்.
ஆம்பூர் அருகே உள்ளது மிட்டாளம் ஊராட்சி வன்னியநாதபுரம் கிராமம். இந்த ஊரின் அருகே ஊட்டல் மலை கானாறு கரையில் உள்ளது நெமிலியம்மன் கோயில். இக்கோயிலுக்கு அருகே பெண் குரங்கு ஒன்று மரம் விட்டு மரம் தாவியபோது, மின்கம்பியில் சிக்கியதில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது.
இதனைக் கண்ட வன்னியநாதபுரம் இளைஞர்கள் மின் துறை ஊழியர்களுடன் இணைந்து, குரங்கின் சடலத்தை மீட்டனர். பின்னர், இளைஞர்கள் தங்கள் பணத்தை செலவிட்டு, இறுதிச் சடங்கு செய்வதற்கான பொருள்களை வாங்கி வந்தனர். பின்னர், பச்சை தென்னை ஓலையில் பாடை கட்டி, முறைப்படி அனைத்து இறுதிச் சடங்குகளையும் ஊர் பெரியவர்கள் வழிகாட்டுதலுடன் செய்தனர்.பெண்கள் ஒப்பாரி வைத்து அழுதனர்.
பின்னர், மேளங்கள் கொட்டியும், பட்டாசுகள் வெடித்தும் இறுதி ஊர்வலம் நடத்தி, அடக்கம் செய்தனர். இச்செயலை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.