கோவை பெரியகடை வீதியில் உள்ள நகைக் கடையில் வருமான வரித் துறை அதிகாரிகள் சனிக்கிழமை சோதனை நடத்தினர்.
கோவை பெரியகடை வீதியில் இரண்டு அடுக்கு நகைக் கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையில், நகைக் கடை உரிமையாளர்களிடம் மொத்தமாகத் தங்கக் கட்டிகளை வாங்கி நகைகளாக மாற்றி விற்பனை செய்யும் தொழிலும் நடைபெற்று வருகிறது. இந்த நிறுவனம் கடந்த சில மாதங்களாக வரி ஏய்ப்பு செய்து வந்ததாக வருமான வரித் துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
இதைத் தொடர்ந்து, இந்தக் கடையில் சனிக்கிழமை காலை 10 முதல் மாலை வரை வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. கோவை ராஜவீதியில் உள்ள மற்றொரு நகைக் கடையில் அதிகாரிகள் ஏற்கெனவே வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினர். கோவையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக சோதனை நடத்தப்பட்டது நகைக் கடை அதிபர்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.