ஆரம்பக் கல்வியைத் தொடங்கி வைக்கும் விதமாக கோவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் கலந்து கொண்டனர்.
நவராத்திரியையொட்டி, கோவையில் உள்ள பல்வேறு கோயில்களில் கொலு வைத்து தினசரி காலை, மாலை வேளைகளில் சிறப்பு வழிபாடு, பூஜைகள் நடைபெற்று வந்தன. நவராத்திரி விழாவின் நிறைவு நாளாக விஜயதசமி கொண்டாடப்படுகிறது.
இந்த நாளில் பள்ளி வயது குழந்தைகளுக்கு எழுத்தாணிப்பால் எனப்படும் வித்யாரம்பம் (எழுத்தறிவித்தல்) நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இந்த நாளில் கல்விக் கடவுளை வணங்கி ஆரம்பக் கல்வியைத் தொடங்கும் குழந்தைகளின் நாவில் ஸ்ரீஹரி மந்திரத்தையும், உயிரெழுத்தையும் எழுதி குழந்தைகளின் கல்வி தொடங்கி வைக்கப்படும்.
அதன்படி, கோவை சித்தாபுதூரில் உள்ள ஐயப்பன் கோயிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. காலை 6 மணிக்குத் தொடங்கி இரவு வரையிலும் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கோவை மாநகரம், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தங்களது குழந்தைகளுடன் வந்திருந்த ஆயிரக்கணக்கான பெற்றோர், நீண்ட வரிசையில் காத்திருந்து பங்கேற்றனர்.
கோயில் நம்பூதிரிகள் குழந்தைகளின் நாக்கில், தேன் தடவிய தங்கக் கம்பி மூலம் ஸ்ரீ ஹரி மந்திரத்தை எழுதினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.