இளவயது பெண்கள் மத்தியில் கருமுட்டை வளர்ச்சி பாதிப்பு அதிகரித்து வருவதாக நோவா ஐ.வி.ஐ. கருத்தரித்தல் மையத்தின் ஆலோசகர் மருத்துவர் லதா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம், மனஅழுத்தம், வேலைப் பளு உள்ளிட்ட காரணங்களால் சமீப காலமாக திருமணமான இளவயது பெண்கள் கருத்தரிக்க முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், அதிகமான உடல் எடை கொண்ட பெண்களே பெரும்பாலானோர். குழந்தை பேறு சிகிச்சைக்காக வரும் 30 வயது முதல் 40 வயது வரையிலான பெண்கள் இப்பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இயற்கைக்கு மாறான ஹார்மோன் காரணமாகவும் கருமுட்டை வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால், கருமுட்டையில் நீர்க் கட்டிகள் உருவாகிறது.
இதில், உடல் எடை அதிகம் உள்ள பெண்கள் வாழ்க்கை முறை மாற்றம், உடற்பயிற்சி, உணவுப் பழக்கம் போன்றவற்றின் மூலம் இப்பிரச்னைக்குத் தீர்வு காண முடியும்.
மேலும், கட்டுப்பாடு இல்லாத ஹார்மோனை சமன் செய்து மாதவிடாய் சுழற்சியை சரி செய்து சிகிச்சை அளிக்க முடியும். இதுதவிர லாப்பிராஸ்கோப்பி மூலம் கருமுட்டையைத் தூண்டி கருத்தரிக்க முடியும் என்றார்.