மருத்துவ மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த 50 சதவீத இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து தொடர்ந்து 3-ஆவது நாளாக கோவை அரசு மருத்துவர்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.டி., எம்.எஸ். உள்ளிட்ட மருத்துவ மேற்படிப்பு சேர்க்கையில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது இந்த இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கோவை மாவட்ட அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் மூன்றாவது நாளாக சனிக்கிழமை பணியைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அரசு மருத்துவமனைக்கு வந்த வெளி நோயாளிகள், உள்நோயாளிகள் பாதிக்கப்பட்டனர்.