கோவையில் குழந்தைகளை வைத்துப் பிச்சை எடுத்த இரு பெண்களை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். அவர்களுடன் குழந்தைகளையும் சிறையில் அடைத்தனர்.
கோவை மாநகரில் பல்வேறு பகுதிகளில் குழந்தைகளை வைத்துப் பிச்சை எடுப்பதாகப் புகார் எழுந்தது. இந்தப் புகாரின்பேரில், மாநகர் முழுவதும் போலீஸார் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினர்.
அதில், கோவை ரயில் நிலையம் முன்பு குழந்தையை வைத்துப் பிச்சை எடுத்து வந்த பெண்ணை ரேஸ்கோர்ஸ் போலீஸார் பிடித்து விசாரணை நடத்தினர். அதில், அப்பெண் சீனிவாசன் என்பவரது மனைவி சுகன்யா (21) என்பது தெரியவந்தது. இதையடுத்து, சுகன்யாவையும், அவரது ஒரு வயதுக் குழந்தையையும் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
ரத்தினபுரி பகுதியில் உள்ள வழிபாட்டுத் தலம் முன்பு, பெண் ஒருவர் இரு குழந்தைகளை வைத்துப் பிச்சை எடுத்து வந்துள்ளார். தகவலின்படி, அங்கு சென்ற ரத்தினபுரி போலீஸார் அப்பெண்ணைப் பிடித்து விசாரணை நடத்தினர். அதில், அப்பெண் லட்சுமிபுரத்தைச் சேர்ந்த செல்வம் என்பவரின் மனைவி மாரியம்மாள் என்பதும், அவர் தனது 2, 8 வயது மகள்களை வைத்துப் பிச்சை எடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து, மாரியம்மாளுடன், அவரது 2 வயது மகளையும் போலீஸார் மத்திய சிறையில் அடைத்தனர். 8 வயது மகளை அருகில் உள்ள காப்பகத்தில் சேர்த்தனர்.
இதுகுறித்து சிறைத் துறை அதிகாரிகள் கூறுகையில், 'வழக்கில் கைது செய்யப்பட்டு தாய் சிறையில் அடைக்கப்படும்போது, 6 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளும் தாயுடன் இருக்கலாம் என்பது சிறை நடைமுறைதான்' என்றார்.