சுல்தான்பேட்டை ஒன்றியம், லட்சுமிநாயக்கன்பாளையத்தில் உள்ள ஆதிதிராவிட மாணவர் விடுதிக் கட்டடம் சிதிலமடைந்த நிலையில் உள்ளது.
லட்சுமிநாயக்கன்பாளையத்தில் உள்ள ஆதிதிராவிட மாணவர் விடுதியில் 100 மாணவர்கள் தங்கும் வசதியுள்ளது. அதில், 85 தாழ்த்தப்பட்ட மாணவர்களும், 15 பிற்படுத்தப்பட்ட மாணவர்களும், 5 இதர பிரிவினரும் தங்க முடியும்.
ஆனால், சென்ற கல்வி ஆண்டில் மொத்தமாக 36 மாணவர்கள் மட்டுமே இங்கு தங்கிப் படித்தனர். மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் குறைந்து வருகிறது. மேலும், இந்த விடுதியைச் சுற்றிலும் முள்புதராக உள்ளது. விடுதியின் சுவர்கள் பெயர்ந்து விழும் நிலையில் உள்ளன. ஏற்கெனவே ஒரு முறை இக்கட்டடம் சீரமைக்கப்பட்டபோது, சரிவர பராமரிப்புப் பணிகள் செய்யாததால், தற்போது இக்கட்டடம் சிதிலமடைந்து காணப்படுகிறது.
இந்த விடுதியிலிருந்து கோவைக்குச் செல்ல 40 கி.மீ. பயணம் செய்ய வேண்டியுள்ளது. விடுதி அமைந்துள்ள பகுதி வழியே சில பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. எனவே, ஒதுக்குப்புறமாக உள்ள இந்த விடுதியில் தங்கிப் பயில மாணவர்கள் விரும்புவதில்லை என்று கூறப்படுகிறது. இவ்விடுதியில் மாதந்தோறும் அரசு சார்பில் ஒவ்வொரு மாணவருக்கும் தலா ரூ. 750 செலவிடப்படுகிறது. தற்போது இக்கட்டடத்தை இடித்துவிட்டு நவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டடம் கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
எனவே மாணவர்களை வேறு கட்டடத்துக்கு மாற்றும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். போக்குவரத்து வசதிகள் அதிகமுள்ள பகுதிக்கு இந்த விடுதியை மாற்றினால் மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்கும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.