நெகமத்தை அடுத்த ஆண்டிபாளையம் பகுதியில் குடிநீர் வழங்கக் கோரி, பொதுமக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட ஆண்டிபாளையத்தில் 1,500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அம்பராம்பாளையம் கூட்டுக் குடிநீர்த் திட்டம், ஆண்டிபாளையம் பகுதியில் உள்ள ஆழ்துளைக் கிணறுகள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த 20 நாள்களுக்கும் மேலாக இப்பகுதிக்கு குடிநீர் வழங்கப்படவில்லையாம். இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஆண்டிபாளையம் பகுதியில் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அங்கு வந்த நெகமம் போலீஸார், ஒன்றிய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்துசென்றனர்.