சூலூரை அடுத்த சோமனூர் அருகே மதுக் கடையை அகற்றக் கோரி, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சோமனூர் அருகே உள்ள ஊஞ்சப்பாளையத்தில் பறையன் காடு என்ற பகுதியில் குடியிருப்புகளுக்கு மத்தியில் மதுக் கடை செயல்பட்டு வருகிறது. இப்பகுதிக்கு வருவதற்கு ரயில்வே இருப்புப் பாதையை ஒட்டிய மாநில நெடுஞ்சாலையே முக்கியச் சாலையாகும். மேலும், இக்கடையின் அருகே மூன்று பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த மதுக் கடையால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வந்தனர்.
ஆகவே, இக்கடையை மூடக் கோரி, அப்பகுதி மக்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த கருமத்தம்பட்டி துணைக் கண்காணிப்பாளர் ஜெயசந்திரன், மதுவிலக்கு காவல் துணைக் கண்காணிப்பாளர் மீனாட்சி, கோவை தெற்கு பகுதி டாஸ்மாக் மேலாளர் பாலாஜி ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதில், இக்கடையை மூட விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து, பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.
வால்பாறையில்...:
வால்பாறை நகரில் மூடப்பட்ட மதுக் கடைகளை சனிக்கிழமை திறப்பதாகத் தகவல் பரவியது. இதையறிந்த பொதுமக்கள் புதுமார்க்கெட் பகுதியில் மூடப்பட்டிருந்த மதுக் கடையை முற்றுகையிட்டனர். அங்கு வந்த போலீஸார் இந்த மதுக் கடை
திறக்கப்பட மாட்டாது என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.