ஆழியாறு பழைய ஆயக்கட்டுப் பாசனத்துக்கு வெள்ளிக்கிழமை உயிர்த் தண்ணீர் திறக்கப்பட்டது.
ஆழியாறு அணை பழைய ஆயக்கட்டுப் பாசனத்தில் 6,400 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்ற. கடந்த ஆண்டு மழைப் பொழிவு இல்லாததால் நெல் பயிருக்குத் தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால், இரண்டாம் போக நெல் சாகுபடி நடைபெறவில்லை.
இந்நிலையில், பழைய ஆயக்கட்டில் உள்ள தென்னை உள்ளிட்ட பயிர்களைக் காப்பாற்ற உயிர்த் தண்ணீர் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.
சட்டப் பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் அணையில் இருந்து தண்ணீரைத் திறந்துவிட்டார்.இதில், வால்பாறை சட்டப் பேரவை உறுப்பினர் கஸ்தூரிவாசு, சார் ஆட்சியர் காயத்ரி, ஆனைமலை பேரூராட்சி முன்னாள் தலைவர் சாந்தலிங்ககுமார், ஆனைமலை விவசாய சங்கச் செயலாளர் பட்டீஸ்வரன், செயற்பொறியாளர் கிருஷ்ணன், உதவி செயற்பொறியாளர் நரேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.விநாடிக்கு 120 கன அடி வீதம் தொடர்ந்து, 15 நாள்களுக்குத் தண்ணீர் திறக்கப்படவுள்ளது.