டெங்கு காய்ச்சலுக்கு கோவை அரசு மருத்துவமனையில் 59 பேரும், சாதாரண வைரஸ் காய்ச்சல் பாதிப்புக்கு 193 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கோவை மற்றும் அதன்சுற்று வட்டாரப் பகுதிகளில் கொசு உற்பத்தி அதிகரித்து வைரஸ் கிருமித் தொற்று ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக கடந்த இரண்டு மாதத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 16 பேரும், மர்மக் காய்ச்சலுக்கு 2 பேரும், பன்றிக் காய்ச்சலுக்கு ஒருவரும் உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது டெங்கு காய்ச்சலுக்கு 59 பேரும், சாதாரண காய்ச்சல் பாதிப்புக்கு 193 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதேபோல, தனியார் மருத்துவமனையிலும் திரளானோர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
மூளைக் காய்ச்சலுக்கு குழந்தை பலி: கோவை, வெள்ளலூர், மகாகணபதி நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகள் சாய்பர்நிதிக்கு (1) காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தையை டாக்டர்கள் பரிசோதித்தபோது மூளைக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, தீவிர சிகிச்சை பிரிவில் குழந்தை அனுமதிக்கப்பட்டது. ஆனால், குழந்தை புதன்கிழமை உயிரிழந்தது.